Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம் : குமாரபாளையத்தில் நடைபெற்ற விசைத்தறி கூலி உயர்வு ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது என அடப்பு தறி சங்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.
குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர் கூலி உயர்வு பேச்சுவார்த்தை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பல கட்டங்களாக தாலுக்கா அலுவலகம், எம்.எல்.ஏ. அலுவலகம் என பல இடங்களில் நடைபெற்று வந்தது.
இதில் உடன்பாடு ஏற்படவில்லை. நேற்று தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் சண்முகவேல், நகராட்சி சேர்மன் த.விஜய்கண்ணன் பங்கேற்ற பேச்சுவார்த்தையில். ஜவுளி உற்பத்தியாளர்கள் அடப்பு தறி உரிமையாளர்களுக்கு 15% கூலி உயர்வும், அடப்பு தறி உரிமையாளர்கள் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவீத கூலி உயர்வும் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.
இது எங்களுக்கு உடன்பாடில்லை என கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர். இது குறித்து சங்க தலைவர் சங்கமேஸ்வரன் கூறியதாவது:
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் 10 சதவீதம் கூலி உயர்வு செய்யலாம் எனவும், அடப்பு தறி சங்கம் சார்பில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு அதே 10 சதவீதம் கூலி உயர்வும் வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் பிப். 20ல் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (நேற்று) தாலுக்கா அலுவலகத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்பு தறி உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளாத நிலையில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
இந்த ஒப்பந்தம் எங்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது. மேலும் இது போன்ற ஒப்பந்தங்கள் முத்திரை தாள்களில் பதிவு செய்வதுதான் வழக்கம். ஆனால் ஒரு அரசியல் கட்சி லெட்டர் பேடில் ஒப்பந்தம் கையொப்பம் பெறப்பட்டு உள்ளது. இதில் எங்களுக்கு உடன்பாடில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதே கருத்தை கூலிக்கு நெசவு நெய்யும் விசைத்தறியாளர்கள் சங்க செயலர் பூபதி, உள்ளிட்ட பலரும் தெரிவித்தனர். இது சம்பந்தமாக துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.